×

பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர்

சென்னை: பால்கனியில் உட்கார வைத்து தாய் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தபோது 4வது மாடியிலிருந்து திடீரென தவறி விழுந்தது 7 மாத பெண் குழந்தை. அதிர்ஷ்டவசமாக தரையில் விழாமல், முதல் மாடியின் தகர கூரை மீது விழுந்து கிடந்தது. உடனே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பூம்பொழில் நகரில் வி.ஜி.என். அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்குள்ள பி 2, பிளாக், 4வது மாடியில் வெங்கடேசன் (32), ரம்யா (28) தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதமே ஆன ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ரம்யா குழந்தையை 4வது மாடியின் பால்கனியில் வைத்து குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கை தவறி, குழந்தை தலைகுப்புற கீழே விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தரையில் போய் மோதாமல், முதல் மாடியின் மேற்கூரையில் உள்ள தகர ஷீட்டின் மேல் விழுந்து அபாயகரமாக கிடந்தது.

ரம்யாவின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். குழந்தை ஷீட்டில் விழுந்து அழுதபடியே கொஞ்ச தூரம் சறுக்கி வந்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அனைவரும் குழந்தையை மீட்க அதிரடியாக செயலில் இறங்கினர். தரை தளத்தில் அனைவரும் பெரிய பெட்ஷீட் மற்றும் மெத்தையை விரித்து, குழந்தை சறுக்கி விழுந்தால் பிடிக்க தயாராக இருந்தனர். பால்கனி தடுப்பு ஷீட்டில் குப்புற கவிழ்ந்து கிடந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது.

இதற்கிடையே முதல் மாடியின் கண்ணாடி தடுப்பு பால்கனி மீது ஒருவர் ஏற, அவரது கால்களை மற்றொருவர் பாதுகாப்பாக பிடித்துக்கொண்டார். எம்பி ஏறிய அவர், எந்த நேரத்திலும் கூரையிலிருந்து சரிந்து கீழே விழுந்து விடும் நிலையில் இருந்த குழந்தையை சாதுரியமாக பிடித்து இழுத்து பத்திரமாக மீட்டார். குழந்தை ஹைரினுக்கு லேசான சிராய்ப்புக் காயங்களே இருந்தன. பின்னர், ஆவடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு சென்றனர். 7 மாத குழந்தை மாடியில் இருந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...